கோவை: கோவையில் எலக்ட்ரிக்கல் கான்டிராக்டரை வழிமறித்து கத்தி முனையில் ரூ.60 ஆயிரம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சவுரிபாளையம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சுதாகர் (45) என்பவர் எலக்ட்ரிக்கல் கான்டிராக்டராக பணியாற்றி வருகிறார். இவர் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் மின்சார பணிகளை மேற்கொண்டு வந்தார்.
சம்பவத்தன்று, அங்கு வேலை செய்த தொழிலாளர்களுக்கு கூலி வழங்கி விட்டு மீதமிருந்த ரூ.60 ஆயிரத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது கட்டிடத்திலிருந்து சிறிது தூரம் சென்றபோது, 3 பேர் திடீரென வழிமறித்து அவரை சுற்றிவளைத்தனர்.
பணம் கேட்டு மிரட்டிய அவர்கள், சுதாகர் மறுத்ததால் கத்தி முனையில் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசில் சுதாகர் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், இந்த சம்பவத்தில் மதுரை மாவட்டம் அருள்சுந்தர்புரத்தைச் சேர்ந்த மாதவன் (23) உள்ளிட்ட 3 பேர் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாதவனை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு பைக் மற்றும் ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ரவி மற்றும் குமரப்பன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


