கோவை: கோவை மாநகராட்சி 21 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி தீர்மானம் ஏதும் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நுண்குப்பை உரமாக்கும் மையம் மற்றும் திடக்கழிவு பிரித்தல் மையம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மனுவில், சுமார் 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் தற்போது குடியிருப்புகளுக்கு மத்தியில் 24 லட்சம் லிட்டர் மற்றும் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் மேல்நிலை தொட்டிகள் செயல்பட்டு வருகின்றன தற்போது இங்கு குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்சிப்பது பொதுமக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பை மையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் அபாயம் உள்ளதுடன், துர்நாற்றம், ஈ, கொசு உள்ளிட்ட நோய் பரப்பும் காரணிகளால் டெங்கு, மலேரியா, சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், திட்டமிடப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் தனியார் மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளதால், இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத மாற்று இடத்தில் மட்டுமே திடக்கழிவு மேலாண்மை மையங்களை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே, இப்பகுதியில் குப்பை மேலாண்மை மையம் அமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி, திட்டத்தை நிரந்தரமாக கைவிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


