கோவை: தமிழ்நாட்டில் இது போன்ற ஒரு தவறை நினைக்கக்கூட பயப்படும் அளவிற்கு கடுமையானதாக தண்டனை இருக்கும் என MLA சுகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூரில் மாயமான 10 வயது சிறுமி, நேற்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் சூலூர் எம்எல்ஏ சுகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இனிமேல் எந்தவொரு குடும்பத்திற்கும், எந்தவொரு ஊரிலும் இப்படி ஒரு துன்பம் நடக்கக்கூடாது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்.
சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அவருக்கும் இதர குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
சம்பவம் நடந்த இடத்தில் இதற்கு முன்னரும் சில விபத்துகளும், தற்கொலைகளும் நடந்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. அந்தப் பகுதியை நேரில் ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காவல்துறையின் மீதான பொதுமக்களின் அதிருப்தி குறித்த கேள்விக்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கோபமும் துக்கமும் நியாயமானதுதான். ஆனால், காவல்துறை இந்த வழக்கை டி.எஸ்.பி தலைமையில் மிகவும் தீவிரமாக கையாண்டு வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை, இனி தமிழ்நாட்டில் இது போன்ற ஒரு தவறை நினைக்கக்கூட பயப்படும் அளவிற்கு மிகக் கடுமையானதாக இருக்கும் என்றார்.



