அரசியலே வேண்டாம் என ஒதுங்கியுள்ள ரஜினியை திமுக எம்எல்ஏ சந்தித்துள்ளது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஸியில் ரஜினி
நடிகர் ரஜினகாந்த் ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும், கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அரசியலில் நுழைய ஆசைப்பட்ட ரஜினி, பின்னர் பின் வாங்கியது அனைவரும் அறிந்ததே. இதனிடையே ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் பகுதி, ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வருவதால், அங்கு தேர்தல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ரஜினியை சந்தித்த திமுக எம்எல்ஏ
இந்த நிலையில், அந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவும், திமுக வேட்பாளருமான எழிலன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்பட்டாலும், தேர்தல் சூழலில் இது அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
ரஜினியிடம் ரிப்போர்ட்
சந்திப்பின் போது, தொகுதியில் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான விரிவான அறிக்கையை ரஜினிகாந்திடம் வழங்கியதாக எழிலன் தெரிவித்துள்ளார். அதோடு, தொகுதியின் எதிர்கால வளர்ச்சி குறித்த திட்டங்களையும் பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் பொதுவாக அரசியல் நிலைப்பாடுகளில் நேரடி ஆதரவை வெளிப்படுத்தாமல் இருப்பவர் என்றாலும், அவரைச் சந்தித்து வாக்கு சேகரிப்பது தேர்தல் காலத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
குறிப்பாக, அவரது வீடு அமைந்துள்ள பகுதியே அந்த தொகுதிக்குள் வருவதால், இந்த சந்திப்பு வாக்காளர்களிடையே ஒரு மனப்போக்கை உருவாக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
அரசியல் சூழலில் சலசலப்பு
மேலும், ரஜினியை அரசியல் தலைவர்கள் சந்திப்பது புதிய விஷயம் அல்ல. ஆனால் தேர்தல் நேரத்தில் நடைபெறும் இத்தகைய சந்திப்புகள், மறைமுக ஆதரவு எனப் புரிந்துகொள்ளப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், எதிர்க்கட்சிகள் இந்த சந்திப்பை அரசியல் கோணத்தில் விமர்சிக்க வாய்ப்பும் உள்ளது.
மொத்தத்தில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரபலங்களின் ஆதரவை பெற முயலும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவது இந்த நிகழ்வின் மூலம் தெளிவாகிறது. இந்த சந்திப்பு எதிர்காலத்தில் அரசியல் விவாதங்களுக்கு துவக்கமாக மாறுமா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.


