கோவை: காவலர்கள் தாக்கியதில் மகனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தாயார் தெரிவித்துள்ளார்.
கோவையில் காவல் நிலையத்தில் 24 வயது இளைஞர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதால், வலிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தாய் குமுறியுள்ளார்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் மணிகண்டன் (24).
கடந்த ஞாயிற்றுக்கிழமை மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு மதுபோதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியுள்ளது.
இந்த நிலையில், பிரச்சனை குறித்து விசாரிப்பதற்காக சிங்காநல்லூர் போலீசார் மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.
அப்போது மணிகண்டனுடன் அவரது தாய் சாந்தியும் காவல் நிலையம் சென்றார்.
அப்போது தன்னை வெளியே அனுப்பிவிட்டு மகன் மீது தாக்குதல் நடத்தியதில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், போலீசார் உதவிக்கு வராததால் டாக்சி வைத்து மகனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாந்தி கூறுகையில்,
“டாஸ்மாக் கடைகளில் பிரச்சனை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வலிப்பு ஏற்பட்டு, ரத்த வாந்தி எடுத்து சிகிச்சை பெற்று வரும் என் மகன் மீது போலீசார் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். என் மகனை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் அவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல் நிலையத்தின் வெளியிலேயே மகனை அமர வைத்து விட்டனர். இது குறித்து நாங்கள் கேட்க சென்றால், நாயை விட கேவலமாக எங்களை காவல் நிலையத்திலிருந்து விரட்டினர்.
என் மகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. போலீசார் ஆம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்து தரவில்லை. இதனால் டாக்சி வைத்து எனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன்.
சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். நான் 10 பவுன் தங்கச் சங்கிலி போட்டு சென்றால்தான் போலீசார் என்னை மதிப்பார்கள் என்றால் நான் எங்கே செல்வது?” என்று தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாரிடம் கேட்டபோது, “அடிதடி பிரச்சனையில் மணிகண்டனை விசாரணைக்கு அழைத்தோம். ஆனால் அவர் மீது எவ்வித தாக்குதலும் நடத்தவில்லை. விசாரிக்கும்போது பதற்றத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காவல் நிலையத்தின் வெளியே அமர வைத்தோம். அந்த சிசிடிவி காட்சிகளும் உள்ளன” என்றனர்.



