கோவை: வெள்ளலூர் பேருந்து நிலையத்தின் பணிகளை மீண்டும் தொடங்க தலைமை செயலாளரிடம் அமைச்சர் விக்னேஷ் கடிதம் வழங்கினார்.
கோவை மாநகர் வெள்ளலூர் பகுதியில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து முனையம் கட்டப்பட்ட நிலையில் பாதியிலேயே ஒரு சில நிர்வாக காரணங்களால் அப்பணிகள் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவற்றை சரி செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் தற்போது வரை அப்பணிகள் துவங்கப்படவில்லை.
கடந்த திமுக ஆட்சியில் வெள்ளலூர் பேருந்து முனையத்தில் மண்டி கிடந்த புதர்கள், செடி கொடிகளை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன அப்பொழுதாவது பேருந்து முனையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப் பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக மக்களின் கோடிக்கணக்கான பணம் வீணாக்கப்படுவதாக பலரும் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில் தற்பொழுது பதவியேற்றுள்ள அரசு விரைந்து அந்த பணிகளையும் மேற்கொண்டு பேருந்து முனையத்தை திறக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் பேருந்து முனையத்தின் பணிகளை மீண்டும் தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளார்.


