கோவை: கோவையில் கள்ளநோட்டுகளை அச்சிட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் 200 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 36,800 ரூபாய் மதிப்பில் 200 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாநகர் சுந்தராபுரம் அருகே குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் சுந்தராபுரம் காவல்துறையினருக்கு அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வரும் சதாம் உசேன் மற்றும் அவரது நண்பர் பைசல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களது இல்லத்தில் நடத்திய சோதனையில் வீட்டில் இருந்து டபென்ட்டால் மாத்திரைகள், மெத்தபெட்டமயின் போதை பொருள் ஆகியவை இருந்தது தெரியவந்தது. பின்னர் அவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி சோதனை மேற்கொண்டதில் 36 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான 200 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
200 ரூபாய் கள்ள நோட்டுக்களை அவர்கள் பிரிண்டர் உதவியுடன் அச்சிட்டு புழக்கத்தில் விட இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களுக்கு காஜா மொய்தீன் என்பவர் வாங்கி கொடுத்து உதவி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மூவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதில் காஜா மொய்தீன் என்பவர் ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 64 வது குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்தவர் ஆவார்.
அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் , அவர்கள் மூன்று பேர் மீதும் போதைப் பொருள் தடுப்புச் சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



