கோவை: கோவை ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், கண் தானம் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தியதுடன், இந்த ஆண்டு நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தான உறுதிமொழி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரியை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய துணை ஜனாதிபதி, டெல்லியில் எவ்வளவு முக்கியமான பொறுப்புகள் இருந்தாலும், கோவைக்கு வந்து மக்களைச் சந்திப்பதையும், நற்பணிகள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தனது கடமையாக கருதுவதாக தெரிவித்தார்.
Also Read: சின்னியம்பாளையத்தில் துணிகரத் திருட்டு! வீடியோ காட்சிகள் உள்ளே
மேலும், தனது மகன் ஜி.கே.என்.எம். மருத்துவமனையில்தான் பிறந்ததாகவும், அப்போது மருத்துவர் மிருதுபாஷினியின் சிகிச்சையால் தனது மனைவியின் உயிர் காப்பாற்றப்பட்டதை வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
இந்திய செவிலியர்கள் உலகம் முழுவதும் மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய தலைமுறை செவிலியர்கள் சேவை மனப்பான்மை, இரக்கம் மற்றும் தன்னம்பிக்கையுடன் நோயாளிகளை அணுக வேண்டும் என்றார்.
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், செவிலியர் கல்விக்கான வரவேற்பும் உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் கல்வி மற்றும் மருத்துவப் பணிகளை பாராட்டிய அவர், மணிஸ் உயர்நிலைப்பள்ளி முதல் தற்போது தொடங்கப்பட்டுள்ள செவிலியர் கல்லூரி வரை அறக்கட்டளையின் சேவைகள் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
Also Read: வெளியாகும் ஜனநாயகன்- பிரம்மாண்டமாக தயாராகி வரும் கோவை திரையரங்குகள்
ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான வயோவந்தனா திட்டம் மற்றும் ஜனௌஷதி மையங்கள் போன்ற திட்டங்கள் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உறுப்பு தானம் மற்றும் கண் தானம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் உறுப்பு தானம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருவதாக பாராட்டினார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கண் தான விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்ததாகவும், முதல் ஆண்டில் 73 பேர், அடுத்த ஆண்டு 240 பேர், பின்னர் 7,500 பேர் கண் தான உறுதிமொழி அளித்ததாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தான உறுதிமொழி பெறும் இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த செவிலியர் கல்லூரி எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரியாகவும், மருத்துவ ஆராய்ச்சி மையமாகவும் வளர வேண்டும் என்றும், அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
2047-ஆம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக வேண்டும் என்ற இலக்கை அடைய சுகாதாரத் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுடன் தனியார் மருத்துவ நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் தலைவர் ஆர். கோபிநாத், துணைத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





