கோவை: மருதமலை அடிவாரம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தின் பெயர்ப் பலகையை மறைக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) பேனர், சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து காவல்துறையினர் அகற்றினர்.
முன்னதாக, புறக்காவல் நிலையத்தின் அதிகாரப்பூர்வ பெயர்ப் பலகை முழுமையாக மறையும் வகையில் பிரம்மாண்ட அரசியல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், காவல்துறையின் அடையாளப் பலகையையே மறைக்கும் வகையில் பேனர் வைக்கப்பட்டிருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் பதிவாகின.

விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், பொதுமக்களுக்கு இடையூறாகவும் விதிமுறைகளை மீறியும் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வீடியோ
அதன்படி, மருதமலை புறக்காவல் நிலையத்தின் பெயர்ப் பலகையை மறைத்திருந்த த.வெ.க. பேனர் அகற்றப்பட்டு, காவல் நிலையத்தின் அடையாளப் பலகை மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



