கோவை: கோவையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட மாநகராட்சி கலையரங்கத்தில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி வகுப்பு தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராமகிருஷ்ண சுவாமி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், நுண் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட
ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
நமது மாவட்டத்தில் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இப்பணிக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், அஞ்சல் வாக்கு சீட்டு எண்ணுதல் குறித்தும், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணும்போது மேற்கொள்ள நடவடிக்கை குறித்தும், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணும் பணிகளை சிறந்த முறையில் பணியாற்றிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


