கோவை: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணபிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மேகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை,
மூக்குகண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
நலத்திட்ட உதவிகள் பெற முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவர்கள், 18, வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில், பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள் தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்காள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.
மேற்படி நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல் நலத்திட்ட உதவிகள் பெறுவதை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையத் தளம் (www.uwb.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி www.uwb.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களை அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



