கோவை: மருதமலை அடிவாரப் பகுதியில் 40 ஆண்டுகளாக நீடித்து வந்த குடிநீர் பிரச்சனைக்கு வெறும் 38 நாட்களில் தீர்வு காணப்பட்டுள்ளதாக கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது தொகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை அறிந்ததாக தெரிவித்தார். குறிப்பாக மருதமலை அடிவாரப் பகுதியில் 30 முதல் 40 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை நீடித்து வந்ததாகவும், இதனை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெறும் 38 நாட்களிலேயே குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கட்சி நிர்வாகியாக இருந்த காலத்தை விட மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதால் பொறுப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் ‘MLA Program’ என்ற இன்டர்ன்ஷிப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களின் பணிகள் மற்றும் மக்கள் சேவையின் அவசியம் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
Also Read: பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி?- கோவையில் முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..
மேலும் மருதமலை அடிவாரப் பகுதியில் கழிவு மேலாண்மை, குப்பை அகற்றுதல், மின்சார வசதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நவீன ஆட்டோமேஷன் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிரந்தர தீர்வுகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
VIDEO
சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கல்வி உதவி, மருத்துவ உதவி, நிதியுதவி உள்ளிட்ட சுமார் 1000 நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதே தனது முதல் முன்னுரிமை என்றும், தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சியை கொண்டு வர தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் கனிமொழி சந்தோஷ் உறுதியளித்தார்.


