கோவை: ஓடும் ரயில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து கோவை வந்த ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையை சேர்ந்த காவலரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் சேக் முகமது. கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் இருந்து இன்டர்சிட்டி ரயிலில் கோவைக்கு வந்துள்ளார்.
அப்பொழுது சட்டக் கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவி ஒருவரும் அதே ரயிலில் வந்துள்ளார். மாணவியின் அருகில் அமர்ந்திருந்த காவலர் சேக் முகமது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
காவலரின் செயலால் அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த ரயில் காட்பாடி அருகே வரும் பொழுது ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து காட்பாடி ரயில் நிலையத்தில் சேக் முகமதுவை ரயில்வே காவல்துறையினர் இறங்க செய்து காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாணவி எடுத்திருந்த வீடியோ பதிவுகளின் அடிப்படையிலும் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையிலும் ஷேக் முகமதுவை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

