கோவை: துடியலூர் பஸ் நிறுத்தத்தில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (40). ஆட்டோ டிரைவர். அப்பநாயக்கன்பாளையம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் (40). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி மகேஷ்குமார் அங்குள்ள துடியலூர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த சந்திர பிரகாஷ் மதுபோதையில் மகேஷ் குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த சந்திரபிரகாஷ் கத்தியை எடுத்து மகேஷ்குமாரை திடீரென குத்தினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனால் சந்திர பிரகாஷ், அவரை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார்.
காயமடைந்த மகேஷ் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து மகேஷ் குமார் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரபிரகாஷை தேடி வருகின்றனர்.

