கோவை: கோவையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பால்புரஸ்கார் விருது பெற்ற குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் விருதின் சான்றிதழ் வழங்கினார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை பறக்க விட்டு மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 77வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் தேசியக்கொடி பறக்க விட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், மாநிலத்தின் முதலமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என அனைவரும் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்துகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் வஉசி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியாபனவர் தேசியக் கொடியை பறக்க விட்டு மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து மூவண்ண பலூன்கள் சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து காவல்துறையின் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 122 பேர் வருவாய் துறையினர் 34 பேர் பேராசிரியர்கள் 30 பேர் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் 127 பேர் என 313 பேருக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இதில் மத்திய அரசின் பால்புரஸ்கார் விருது வென்ற உயிரிழந்த வியோமா பிரியா சிறுமியின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் பெற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மேற்கு மண்டல ஐஜி சரவணசுந்தர், கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

