டெல்லி: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் முடிவானதை தொடர்ந்து இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை தாறுமாறாக அதிகரித்து உத்தரவிட்டிருந்தார் டிரம்ப்.
இந்த நிலையில், அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், நிலக்கரி உள்ளிட்டவற்றை 500 பில்லியன் டாலருக்கு அதிகமாக வாங்க பிரதமர் மோடி ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாகவும் பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்க பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார் என்றும், வர்த்தக ஒப்பந்தம் முடிவானதை தொடர்ந்து, இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஆனால் இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இது தொடர்பான தகவல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டுமே வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

