கோவை: பணியாளர்கள் தேர்வு முறையை மாற்றக் கோரியும், பாதுகாவலர்கள் நியமிக்கப்படாததைக் கண்டித்தும் கோவையில் எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.பி.ஐ. வங்கியில் பாதுகாவலர்கள் நியமனம் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், பாதுகாவலர்களை நியமித்தல், பியூன் பணியிடங்களை அரசுப் பணியிடங்களாக நிரப்புதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் வரும் மே 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதனிடையே, எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் சங்கத்தின் கோவை மண்டலம் சார்பில், கோவை தலைமை அலுவலகத்தில் இன்று அடையாள தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதில், 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கருப்பு நிற உடை அணிந்து காலை முதல் மாலை வரை தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்கத்தின் கோவை மண்டல துணைப் பொதுச்செயலாளர் செந்தில்குமார் கூறுகையில்,.

“எஸ்.பி.ஐ. வங்கியில் பாதுகாவலர்கள் நியமிக்கப்படாததால், ஊழியர்களின் பாதுகாப்பும், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், பியூன் பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறை பின்பற்றப்படுவதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எங்களது போராட்டம் வரும் மே 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதற்கு முந்தைய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் இயங்காது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.
இதுவரை பல்வேறு வங்கிகளுடன் இணைந்து எஸ்.பி.ஐ. ஊழியர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.பி.ஐ. ஊழியர்கள் மட்டும் தனியாக போராட்டம் நடத்துகிறோம்.
நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.




Bank ye out source panna nala irukum….