கோவை: இதய நோய்களை கருவிலேயே கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளிப்பது தொடர்பான தென்னிந்திய அளவிலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான PSG Fetal Echocon 2026 கருத்தரங்கம் கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
மருத்துவத் துறையில் நாளுக்கு நாள் புதுப்புது தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் சூழலில், மருத்துவர்களுக்கும் மாணவர்களுக்கும் அது தொடர்பான விழிப்புணர்வும், அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளும் தேவையான ஒன்றாகிறது.
இதனிடையே, கோவையில் கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய் பாதிப்புகளைக் கண்டறிந்து அதற்கு முறையாக சிகிச்சை அளிப்பது தொடர்பாக பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பில் PSG Fetal Echocon 2026 என்ற கருத்தரங்கு இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், மூத்த மருத்துவர்கள் சுரேஷ் சேசாஸ்திரி, இந்திராணி சுரேஷ், ஷாந்தி நரசிம்மன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சி குறித்து பிஎஸ்ஜி மருத்துவமனையின் கருவில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவர்கள் லலிதா, மதுரா, ஐஸ்வர்யா, நிருபா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் 1000ல் ஒரு குழந்தைக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு இருக்கும் குறைபாடுகளை கண்டறியும் தொழில் நுட்பம் தற்போது உள்ளது. இதனிடையே ஃபீட்டல் எகோ கார்டியோகிராபி மூலம் இதய மற்றும் மரபணு பிரச்சினைகளை கண்டறிய முடியும்.
இந்த பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் குழந்தைகளின் பெற்றோர் அதற்கான சிகிச்சைக்கு தயாராக உதவ முடியும்.
இதனிடையே மருத்துவர்களுக்கு இதுகுறித்து தொடர் பயிற்சி மற்றும் விளக்கம் அளிக்கும் விதமாக, இந்தாண்டு Every Little Heart Matters என்ற கருப்பொருளை மையப்படுத்தி இந்த இரண்டு நாள் கருத்தரங்கம் PSG Fetal Echocon 2026 நடைபெறுகிறது.
இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

