கோவை: கோவையில் ஐந்தாவது நாளான இன்று மெழுகுவர்த்தி ஏந்தி அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
கோவையில் ஐந்தாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் லைட் அடித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று காலையும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் மேற்கொண்டு கைது செய்யப்பட்டனர் தொடர்ந்து மாலை விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் போராட்டத்தை துவக்கினர்.
இரவு முழுவதும் அங்கேயே படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்து வரும் அவர்கள் இன்று காலை மதியம் சமையல் செய்து போராட்டம் மேற்கொண்டனர். மேலும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாலை மெழுகுவர்த்தி ஏந்தியும், செல்போன் டார்ச்சை ஒளிர வைத்தும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர். நேற்று போல் இன்றும் அங்கேயே படுத்துறங்க முடிவு செய்துள்ளனர்.
காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அப்பொழுது பத்தாண்டு பணி முடிந்த தகுதியுள்ள பணியாளர்களை 50% சேர்க்க வேண்டும்
அங்கன்வாடிக்கு கோடை விடுமுறை தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவ காப்பீடு மகப்பேறு விடுப்பு 12 மாதம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

