கோவை: இன்ஸ்டாகிராமில் மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறான கருத்துகளை பரப்பிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேஷ்வரன்(27). இவருக்கும் கோவை கணபதி பகுதியை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் ஆனது.
அதன் பின்பு இருவரும் மதுரையில் கணவர் வீட்டில் வசித்து வந்தனர். ஆனால் மாதேஷ்வரன் வேலைக்கு செல்லாமல், மனைவியை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் உள்ளது.
இதனையடுத்து மாதேஷ்வரனின் கொடுமை தாங்காமல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த பெண் கோவையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
ஆனால் அதன்பின்பும், மாதேஷ்வரனின் டார்ச்சர் அடங்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, வாட்ஸ் ஆப்பில் மனைவியை அவமானப்படுத்தும் விதமாக மெசேஜ் செய்வது என தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் எல்லை மீறி போன மாதேஷ்வரன் தனது மனைவியின் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அவரது நடத்தை குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று மாதேஷ்வரனை கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
Instagram defamation arrest

