கோவை: அ.தி.மு.க பிரமுகர்கள் உட்பட 4 பேரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூர் எம்ஆர்ஆர் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (54). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும், அ.தி.மு.க வட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 5ம் தேதி சுரேஷ்குமார் தனது நண்பர்களுடன் ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் அருகே நின்றிருந்தார். அப்போது ஒண்டிப்புதூர் ராமசந்திர வீதியை சேர்ந்த முருகேசன் (51) என்பவர் வந்து அங்கு உள்ள ஒர்க்ஷாப் உரிமையாளர் பாபு என்பவரை மது போதையில் தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த சுரேஷ்குமார் அவரை கண்டித்து அங்கிருந்து செல்லும் படி கூறியுள்ளார். இதனால் முருகேசன் அங்கிருந்து சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுரேஷ்குமார், தனது நண்பர்கள் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஈஷா செந்தில்குமார், சிவக்குமார், சிவராம் ஆகியோருடன் வழக்கம் போல சுங்கம் மைதானம் அருகே நின்றிருந்தார். அப்போது சுரேஷ்குமார் ஏற்கனவே கண்டித்து அனுப்பிய முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் அனிஷ் (45), ஒண்டிப்புதூர் போயர் வீதியை சேர்ந்த தம்பிதுரை (42) ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்கள் சுரேஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி பணம் கேட்டனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் மற்றும் அரவது நண்பர்கள், 3 பேரையும் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தம்பிதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷ்குமாரின் தலையில் குத்தினார். அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், சிவக்குமார், சிவராம் ஆகியோர் தம்பிதுரையை தடுத்தனர். உடனே அனிஷ் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து அவர்கள் 3 பேரையும் குத்தினார்.
பின்னர் அவர்கள், சுரேஷ்குமாரை அவரது நண்பர்களையும் மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றனர். பலத்த காயம் அடைந்த 4 பேரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து சுரேஷ்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். அப்போது அதே பகுதியில் பதுங்கிருந்த முருகேசன் மற்றும் தம்பிதுரையை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அனிசை தேடி வருகின்றனர்.

