கோவை: எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுபவர்களுக்கு தான் எங்கள் வாக்கு என்று கணினி ஆசிரியர்களாக காத்திருக்கும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கொண்டு வர வேண்டும் அதற்காக பி.எட், கணினி அறிவியல் முடித்து தகுதியுடன் காத்திருப்பவர்களை தான் நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமை சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக 1ம்வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவர வேண்டும், தனி பாட புத்தகங்களை கொண்டு வந்து பாட வேளைகளை ஒதுக்கிட வேண்டும், கணினி பயிற்றுநர் பணி இடங்களை தனியாரிடம் டெண்டர் விடும் முறையில் நிரப்பாமல் அரசே நேரடியாக பி.எட், கணினி அறிவியல் பட்டம் பெற்றவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
மத்திய அரசின் ICT திட்டத்தின் கீழ் நடைபெறும் நியமனங்களில் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும் மேலும் கணினி அறிவியல் பாடத்தில் பி எட் பட்டம் பெற்றவர்களுக்கு BEO,DEO போன்ற தேர்வுகளை எழுத அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
கணினி ஆசிரியர்களாகுவதற்கு பல்வேறு தகுதி பட்டங்களை பெற்றிருந்தாலும் தங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்றனர்.
2019 ஆம் ஆண்டு பணிநியமனங்கள் செய்த பொழுது கணினி பாடத்திட்டத்தில் அடிப்படை பட்டங்களை பெற்றவர்களை மட்டுமே குறைந்த சம்பளத்தில் நியமித்ததாகவும் ஆனால் இதற்காகவே தகுதி உள்ள பட்டங்களை பெற்ற தங்களை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என சாடினர்.
இதற்காக மத்திய அரசு ICT திட்டத்தின் கீழ் 1076 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் வேற்றுப்பாடம் படித்தவர்களை கணினி ஆசிரியர்களாக நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்கள் அவ்வாறு செய்தால் எங்களுடைய வாழ்வாதாரம் என்ன ஆவது எங்களுடன் படித்த பலரும் கூலி வேலைக்கு தான் செல்கிறார்கள் என வேதனை தெரிவித்தனர்.
எனவே எங்கள் கோரிக்கைகளை தனி அறிக்கையாக கொண்டு வர வேண்டும் எனவும் எங்களிடம் ஐந்து லட்சம் வாக்குகள் உள்ளது எங்களுடைய கோரிக்கைகளை யார் நிறைவேற்றுவார்களோ சங்கத்தினர் யாரை குறிப்பிடுகிறார்களோ அவர்களுக்குத்தான் நாங்கள் வாக்களிப்போம் எனவும் தெரிவித்தனர்.





