கோவை: எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுபவர்களுக்கு தான் எங்கள் வாக்கு என்று கணினி ஆசிரியர்களாக காத்திருக்கும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கொண்டு வர வேண்டும் அதற்காக பி.எட், கணினி அறிவியல் முடித்து தகுதியுடன் காத்திருப்பவர்களை தான் நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமை சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக 1ம்வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவர வேண்டும், தனி பாட புத்தகங்களை கொண்டு வந்து பாட வேளைகளை ஒதுக்கிட வேண்டும், கணினி பயிற்றுநர் பணி இடங்களை தனியாரிடம் டெண்டர் விடும் முறையில் நிரப்பாமல் அரசே நேரடியாக பி.எட், கணினி அறிவியல் பட்டம் பெற்றவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
மத்திய அரசின் ICT திட்டத்தின் கீழ் நடைபெறும் நியமனங்களில் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும் மேலும் கணினி அறிவியல் பாடத்தில் பி எட் பட்டம் பெற்றவர்களுக்கு BEO,DEO போன்ற தேர்வுகளை எழுத அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
கணினி ஆசிரியர்களாகுவதற்கு பல்வேறு தகுதி பட்டங்களை பெற்றிருந்தாலும் தங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்றனர்.
2019 ஆம் ஆண்டு பணிநியமனங்கள் செய்த பொழுது கணினி பாடத்திட்டத்தில் அடிப்படை பட்டங்களை பெற்றவர்களை மட்டுமே குறைந்த சம்பளத்தில் நியமித்ததாகவும் ஆனால் இதற்காகவே தகுதி உள்ள பட்டங்களை பெற்ற தங்களை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என சாடினர்.
இதற்காக மத்திய அரசு ICT திட்டத்தின் கீழ் 1076 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் வேற்றுப்பாடம் படித்தவர்களை கணினி ஆசிரியர்களாக நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்கள் அவ்வாறு செய்தால் எங்களுடைய வாழ்வாதாரம் என்ன ஆவது எங்களுடன் படித்த பலரும் கூலி வேலைக்கு தான் செல்கிறார்கள் என வேதனை தெரிவித்தனர்.
எனவே எங்கள் கோரிக்கைகளை தனி அறிக்கையாக கொண்டு வர வேண்டும் எனவும் எங்களிடம் ஐந்து லட்சம் வாக்குகள் உள்ளது எங்களுடைய கோரிக்கைகளை யார் நிறைவேற்றுவார்களோ சங்கத்தினர் யாரை குறிப்பிடுகிறார்களோ அவர்களுக்குத்தான் நாங்கள் வாக்களிப்போம் எனவும் தெரிவித்தனர்.


*கோரிக்கை மனு*
அன்புடையீர்,
தமிழ்நாடு அரசு அவர்களுக்கு,
2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சமச்சீர் கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்ட கணினி அறிவியல் பாடம், 2011 ஆட்சி மாற்றத்தால் அரசு பள்ளிகளில் நீக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் கணினி அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்ற மற்றும் B.Ed முடித்த ஆசிரியர்கள் நீண்ட காலமாக வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அரசு பள்ளிகளில் “ICT Lab (Information and Communication Technology Lab)” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ICT Lab திட்டம் முழுக்க முழுக்க கணினி அறிவியல் (Computer Science) கல்விக்காகவும், கணினி அறிவியல் B.Ed முடித்த தகுதி பெற்ற ஆசிரியர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும்.
இந்த ICT Lab திட்டத்திற்காக ₹1,076 கோடி நிதி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
• கணினி அறிவியலுக்கான தனி பாடத்திட்டம்
• அதற்கேற்ப பாடத்திட்டம் (Curriculum)
• நவீன வசதிகளுடன் கூடிய கணினி ஆய்வுகூடம் (Lab)
• ஆய்வுகூடத்திற்கான Server
• குறைந்தது 30 கணினிகள்
• இணைய வசதி மற்றும் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள்
இந்த ICT Lab திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், Server மற்றும் கணினிகளை கையாளவும், மாணவர்களுக்கு முறையான கணினி அறிவியல் கல்வி வழங்கவும் கணினி அறிவியல் தகுதி பெற்ற ஆசிரியர்கள் அவசியமாக தேவைப்படும்.
இந்த ICT Lab திட்டத்தின் கீழ் வழக்கமான அரசு ஆசிரியர்களை வைத்து செயல்படுத்துவது சாத்தியமல்ல. ஏனெனில் இதற்கான அடிப்படை நோக்கமே கணினி அறிவியல் பாடமும், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தகுதி பெற்ற ஆசிரியர் நியமனமும் அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆகும்.
மேலும், ICT Lab திட்டம் நாடு முழுவதும் அனைத்துப் மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பும் ஆகும். இதன் அடிப்படையில், மதிய அரசின் கல்வித் திட்டங்களை மாநில அரசுகள் முழுமையாக செயல்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.
ஆனால், தமிழ்நாடு அரசு இந்த ICT Lab திட்டத்தை “ITEC Lab” என்ற பெயரில் மாற்றி, சில அரசு பள்ளிகளில் மட்டுமே நடைமுறைப்படுத்தி வருகிறது. அதுவும், மிகக் குறைந்த இடங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளிலும் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.
மேலும், இந்த ITEC Lab-களில் கணினி அறிவியலில் B.Ed முடித்த தகுதி பெற்ற ஆசிரியர்களை நியமிக்காமல்,
• B.Com / M.Com முடித்தவர்கள்
• DME போன்ற பிற துறையினர்
• C++, Java போன்ற குறுகிய கால (Short-Term) கோர்ஸ் படித்தவர்கள்
ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கணினி அறிவியலில் B.Ed முடித்த சுமார் 70,000 ஆசிரியர்கள் இன்று வரை வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இவர்களில் பலர் தங்களின் குடும்பங்களுடன் சேர்த்து சுமார் 5 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, எங்களுக்காக ஒரு விடியல் தராவிட்டாலும், எங்களுக்கு உரிய தீர்வு தராவிட்டாலும், நாங்கள் வாழ்கையை இழந்து விடுவோம் என்பதையே தெளிவாக காட்டுகிறது.
எந்த அரசியல் கட்சியும், எந்த தேர்தல் அறிக்கையிலும்:
• கணினி அறிவியலை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை 6வது பாடமாக (Sixth Subject) நிரந்தரமாக கொண்டு வருவது,
• B.Ed (Computer Science) முடித்தவர்களுக்கு TET / PGT / PG Assistant தேர்வுகள் நடத்துவது,
• தேர்வுகள் மற்றும் நியமனங்களில் நியாயமான சலுகைகளை வழங்குவது
பற்றி எந்த தெளிவான அறிவிப்புகளையும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலைமை B.Ed (Computer Science) முடித்த ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், வேலைவாய்ப்பு இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு தனிநபரின் கருத்தல்ல. இது தமிழ்நாடு முழுவதும் உள்ள கணினி அறிவியல் பட்டதாரி, வேலைவாய்ப்பற்ற ஆசிரியர்களின் ஒற்றுமையான கோரிக்கையாகும்.
*எனவே, எங்கள் கோரிக்கைகள்:*
1.
கணினி அறிவியல் பாடத்தை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை 6வது பாடமாக (Sixth Subject) நிரந்தர தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும்.
2.
ICT Lab திட்டத்தை முழுமையாக மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும்.
3.
ITEC Lab என பெயர் மாற்றம் செய்து சுருக்காமல், முழுமையான ICT Lab திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
4.
B.Ed (Computer Science) முடித்த தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி, தனிப்பட்ட பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
5.
TET / PGT / PG Assistant தேர்வுகளை உடனடியாக நடத்தி, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
6.
பிற துறையினரை நியமிப்பதை நிறுத்தி, தகுதியான கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும்.
*இக்கோரிக்கை, கணினி அறிவியல் ஆசிரியர்களின் எதிர்காலத்தையும், அரசு பள்ளி மாணவர்களின் தரமான கல்வி உரிமையையும் பாதுகாக்கும் ஒரு முக்கியமான கோரிக்கையாகும்.*
ஆகையால், *தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, கணினி அறிவியலை நிரந்தர பாடமாக அறிவித்து, தகுதி பெற்ற B.Ed (Computer Science) ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.*
நன்றி.