கோவை: கோவை சரவணம்பட்டி அருகே கழிவுநீர் வாய்க்காலில் மர்மமான முறையில் சமையல் தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி–காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் கார் சுத்தம் செய்யும் நிறுவனத்தின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஒருவர் இறந்து கிடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பள்ளத்துறை அருகே பச்சாபாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கசாமி (57) என்பது தெரிய வந்தது. இவர் சமையல் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக மனைவி பாப்பாத்தியிடம் கூறிவிட்டு சென்ற ரங்கசாமி, இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், அவர் கழிவுநீர் வாய்க்காலில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவி பாப்பாத்தி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரங்கசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தவறி விழுந்து இறந்தாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

