கோவை: வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தின் போது பக்தர் ஒருவர் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தர் ஒருவர் மலையேற்றத்தின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், எடாங்கிமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் தேசிங்கு ராஜன் (வயது 60). இவர் தனது நண்பர்களுடன் கோவை வெள்ளியங்கிரி மலைக் கோவில் மலையேற்றத்திற்குச் சென்றார்.
அப்போது 5-வது மலையான சந்தனமலையில் ஒட்டன் சித்தர் சமாதி அருகே ஏறிக்கொண்டிருந்த போது, தேசிங்கு ராஜனுக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் அங்கேயே சுயநினைவின்றி மயங்கி விழுந்தார்.
இது குறித்த தகவலறிந்த, ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் போளுவாம்பட்டி வனப்பணியாளர்கள், டோலி தூக்கும் சுமை பணியாளர்களுடன் இணைந்து சம்பவ இடத்திற்குச் சென்று மயக்கத்தில் இருந்த தேசிங்கு ராஜனை டோலி மூலம் 5-வது மலையிலிருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு காத்திருந்த மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த அவரின் உடல் ஆலந்துறை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பக்தர்கள் மலையேறிக் கொண்டிருந்த போதே, மற்றொரு பக்தர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இது முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

