கோவை: கோவை மாநகரில் தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தெருநாய்களை காப்பகங்களில் பராமரிக்கும் புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவை மாநகரில் கடந்த ஆண்டில் 14,296 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாய்களை காப்பகத்தில் பராமரிக்கும் திட்டம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகரில் தற்போது 1 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாய்கள் பராமரிப்பில்லாமல் உணவு தேடி தெருக்கள் மற்றும் சாலைகளில் திரிவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலைகளில் நடந்து செல்பவர்கள், டூ வீலர்களில் செல்பவர்களை துரத்தி கடிக்கிறது.
இரவில் டூ வீலர்களில் செல்பவர்கள் அச்சத்துடனேயே நாய்கள் கூட்டத்தை சில இடங்களில் கடக்க வேண்டிய நிலை உள்ளது. நாய் கடி மூலம் ரேபிஸ் நோய் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிப்படைந்து வருகின்றனர். கோவை நகரில் உக்கடம், கரும்புக்கடை, செல்வபுரம், போத்தனூர், சரவணம்பட்டி, புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதனால் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள தெருநாய் பிரச்சனை விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இந்த நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் பரவாமல் தடுக்கவும் கோவை மாநகராட்சி சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை உக்கடம் புல்லுக்காடு, ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொண்டு நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், வெள்ளலூரில் புதிய நாய் கருத்தடை மையம் அமைப்பதற்கான திட்டமும் உள்ளது.
கடந்த ஆண்டில் கோவை மாநகரில் மட்டும் 33 ஆயிரம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் மீதமுள்ள அனைத்து நாய்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் நாய்களால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க மாநகராட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ரேபிஸ் தடுப்பூசி, கருத்தடை ஆகியவை செய்யப்பட்டு வருகிறது. நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கிறோம்.
கடந்த ஆண்டில் மட்டும் மாநகரில் உள்ள 4 கருத்தடை மையங்களில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் 14,296 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 36 ஆயிரம் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகரில் உள்ள மருத்துவமனை வளாகங்கள், அரசு அலுவலக வளாகங்கள், ரயில், பஸ் நிலையங்களில் பிடிபடும் தெருநாய்களை பராமரிக்க காப்பகம் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டில் குறைந்தபட்சம் ஆயிரம் தெருநாய்களை காப்பகத்தில் வைத்து பராமரிக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

