கோவை: கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கோவையில் சமீப காலமாக ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட அரசு வளாகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. தீவிர சோதனையில் இது வெறும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது மட்டும் தெரிய வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இன்று கோவை ரேஸ்கோர்சில் உள்ள வழக்கறிஞர்கள் பயிற்சி மைய அலுவலகத்தில் இமெயில் தகவல்களை ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மெயிலில் கோவை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது வெடித்து சிதற உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள் காலை 10:45 மணிக்கு ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறைகளில் தீவிர சோதனை செய்தனர்.
ஆனால் நீண்ட நேரம் சோதனைக்கு பின்னர் இந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசு அலுவலகங்களுக்கு இதுபோல் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கும் நபர் டார்க் நெட் இணையதளம் மூலம் மிரட்டல் விடுப்பதால் அந்த முகவரியை வைத்து மிரட்டல் விடுக்கும் ஆசாமிகளை கண்டறிவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.

