கோவை: இருவாச்சி பறவையை கோவை மாவட்டத்திற்கான தேர்தல் அடையாளமாக மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பிலும் மாவட்ட நிர்வாகங்கள் தரப்பிலும் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தேர்தல் அடையாளச் சின்னங்கள் அந்தந்த மாவட்டங்கள் வாரியாக அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்திற்காக இருவாச்சி பறவை Election Icon ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பவன்குமார் இன்று அறிமுகம் செய்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட தேர்தல் பணி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் அரிதாக காணப்படும் இந்த பறவை தேர்தல் Icon க்காக தேர்வு செய்யப்பட்டு தேர்தல் வீரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. காட்டன் பனியன் பட்டு வேட்டி கட்டியவாறு விரலில் வாக்களித்த மையுடன் இந்த பறவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவித்தவுடன் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இதனை விழிப்புணர்விற்காக வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

