கோவை: கோவையில் இன்று திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் சந்திப்பு மாநாடு நடைபெறும் நிலையில், இதில் பங்கேற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் மண்டல அளவிலான பாக முகவர்கள் மாநாட்டை தி.மு.க நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு இன்று கோவை – கொச்சி தேசிய நெடுஞ்சாலை சக்தி கல்லூரி உள்ள திறந்தவெளி மைதானத்தில் நடக்கிறது.
இதற்கு தி.மு.க மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற உள்ளது. மேற்கு மண்டல பாக முகவர்கள் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேச உள்ளார்.
மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் பாக முகவர்கள் பங்கேற்கும் வகையில் திடல் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் பங்கேற்க வருபவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று மாநாடு பகுதியில் நடைபெற்று வந்த அனைத்து பணிகளையும் மேற்கு மண்டல தி.மு.க பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில் நடந்தது. மேலும் முதலமைச்சர் நிகழ்ச்சி பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை தருகிறார். இதை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கும் அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல், விழா நடைபெறும் வெங்கடாபுரம், நீலாம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே அந்தப் பகுதிகளில் நாளை மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

