கோவை: மருதமலை கோவிலில் செல்போன் பேசுவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
அண்மை காலமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் செல்போனில் புகைப்படம் எடுப்பது ரீல்ஸ் பதிவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் இதர பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில் மருதமலை கோவில் வளாகத்திற்குள் செல்போன் பேசுவதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை 10.03.2026 முதல் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராஜகோபுரம் நுழைவாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணிய சுவாமி சன்னதி, பாம்பாட்டி சித்தர் சன்னதி, உட்பட அனைத்து சன்னதிகள் மற்றும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பேசுவதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிலில் இராஜகோபுரம் நுழைவாயிலில் நுழையும் போதே செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அமைதியாக சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் இதற்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

