Coimbatore Crime News: கோவையில் கடந்த 77 நாட்களில் ஆன்லைன் மூலம் ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் சைபர் கிரைம் மோசடியால் அதிகளவில் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்கள் பணத்தை இழக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் நாளுக்கு நாள் பொதுமக்கள் பணத்தை இழந்து வருவது தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு கோவை மாநகரில் கடந்தாண்டு ஆன்லைன் மூலம் ரூ.87 கோடியை மக்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களில் சைபர் கிரைம் கும்பலிடம் ரூ.15 கோடியை மக்கள் பறிகொடுத்துள்ளனர்.
Coimbatore Crime News
இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் விதவிதமான மோசடிகளில் ஈடுபடுகின்றனர். கொரியரில் போதைப்பொருள் வந்திருப்பதாக கூறி பணம் மோசடி, டிஜிட்டல் அரஸ்ட், டிரேடிங், ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதனை தடுக்க கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாயிலாக தினமும் விழிப்புணர்வு ரீல்ஸ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் அதனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் அழைப்பின் போது வந்த விழிப்புணர்வு காலர்டியூனால் சைபர் கிரைம் மோசடி குறைந்து இருந்தது.
Click here to read news பீளமேட்டில் ஜிபே மூலம் வாலிபரிடம் வழிப்பறி… மக்களே உஷார்!
படித்தவர்களே
ஆன்லைன் மோசடியில் பெரும்பாலும் படித்தவர்கள் தான் பணத்தை இழந்துள்ளனர். வங்கி ஊழியர்கள், முன்னாள் அரசு ஊழியர்களும் டிஜிட்டல் அரஸ்ட், ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்து வருகின்றனர்.
இவ்வாறு கோவை மாநகரில் கடந்தாண்டு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் ரூ.87 கோடியே 16 லட்சத்து 54 ஆயிரத்து 811ஐ இழந்திருந்தனர். இந்த நிலையில் பல்வேறு விழிப்புணர்வுகள் இருந்தும் கடந்த 3 மாதங்களில், அதாவது 77 நாட்களில் ரூ.15 கோடியை மக்கள் இழந்துள்ளனர்.
Click here to read news பெற்றோர்களே குழந்தைகள் முன் சண்டையிடாதீர்… கோவையில் சோக சம்பவம்!
77 நாட்களில் 2234 பேர் புகார் அளித்துள்ளனர். இதில் பணத்தை பறிகொடுத்ததாக 1765 பேர் புகார் அளித்துள்ளனர். பணம் சாராத சைபர் கிரைம் குற்றங்கள், அதாவது படங்களை மார்பிங் செய்தல், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற புகார்கள் 496 பேர் அளித்துள்ளனர். பணத்தை பொருத்தவரை ரூ.15 கோடியை இழந்துள்ளனர்.
அதில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 77 ஆயிரம் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட பணத்தில் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சத்து 24 ஆயிரத்து 108 பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
பொதுமக்களே ஆன்லைன் மோசடிகளில் ஏமார்ந்துவிடாதீர்கள். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பணத்தை இழக்க நேர்ந்தால் https://cybercrime.gov.in/Webform/Accept.aspx என்ற இணையதளத்தில் புகார் தெரிவியுங்கள். இந்த விழிப்புணர்வு செய்தியை உங்கள் உறவுகளுக்கு பகிர்ந்து உதவுங்கள்

