கோவை: கோவை மத்திய சிறையில் கைதி ஒருவரை தாக்கி, அவரது முகத்தில் கொதிக்கும் டீ ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 3 கைதிகள் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் கே. சகாதேவன் (33). இவர் நீதிமன்ற உத்தரவின் படி சமீபத்தில் திருப்பூர் சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறை நிர்வாகத்தின் தகவலின்படி, குற்றச்சாட்டுக்கு உள்ளான கைதியான சிரஞ்சீவியும், கோவை சிறைக்கு வருவதற்கு முன்பு திருப்பூர் சிறையில் தான் இருந்துள்ளார். அப்போதே சகாதேவனுடன் அவருக்கு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சகாதேவன் டீ வாங்கச் சென்றபோது, திருப்பூர் சிறையில் ஏற்பட்ட பழைய பிரச்சினையை காரணமாக வைத்து சிரஞ்சீவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் மோதலாக மாறியிருக்கிறது.
அப்போது சிரஞ்சீவியின் சிறை நண்பர்களான கண்ணன், ரியாஸ் ஆகியோருடன் சேர்ந்து மூவரும் சகாதேவனை தாக்கி, கொதிக்கும் டீயை அவரது முகத்தில் ஊற்றியுள்ளனர். வலியால் துடித்த சகாதேவனை சிறை ஊழியர்கள் உடனடியாக சிறை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர்.
Read news: கோவை திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் இல்லை- கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரம்…
இந்த நிலையில், சகாதேவன் அளித்த புகாரின் அடிப்படையில் சிரஞ்சீவி, கண்ணன், ரியாஸ் ஆகிய மூன்று சிறைக் கைதிகள் மீதும் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

