கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் மோதுகின்றன. இதில் பொள்ளாச்சியில் மட்டும் தி.மு.க. கூட்டணி கட்சியைச் சேர்ந்த கொ.ம.தே.க. வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால், அன்றைய தினங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பணியில் இருந்த சில போலீசார் சீருடையில் அணியும் கேமராக்களை அணிந்திருந்தனர். இதன் மூலம் அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டன.
கோவையில் நேற்று த.வெ.க. வேட்பாளர்கள் ஒரு சிலர் மட்டும் தங்களது தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்கள் தவிர சுயேச்சைகளும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவில்லை.
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். கோவையில் 10 தொகுதிகளுக்கும் சேர்த்து இதுவரை 42 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 30 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள் ஆவர்.
மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை ஆகிய தொகுதிகளில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ். வேலுமணி என்ற பெயரில் சுயேச்சை ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். நாளை மற்றும் 6ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். எனவே, இனிவரும் நாட்களில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

