கோவை: பெரும் எதிர்பார்ப்பை அடுத்து கோவை வடக்கு தொகுதி தே.ஜ கூட்டணியில் வானதி சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பெரும்பாலான தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டனர்.
எனினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக கட்சி வேட்பாளர்கள் நீண்ட நாட்களாக அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் அந்தக் கட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அத்தொகுதி மக்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
கோவை மாவட்டத்தை பொருத்தவரை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்ததால் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அந்த தொகுதி மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர்.

இறுதியாக இன்று பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த நிலையில் தற்போது கோவை வடக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் கோவை வடக்கு தொகுதியில் கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் முழுமை பெற்றுள்ளனர். அதன்படி கோவை வடக்கு தொகுதியில் திமுக சார்பில் துரை செந்தமிழ் செல்வன், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் நர்மதா, தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் சம்பத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

