கயல் சீரியல் நடிகை வீடியோ காலில் பேசிக்கொண்டே வீட்டுக்குள் தூக்கு போட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்தவர் சுபாஷினி என்ற சாஸ்விபாலா(36). இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். கயல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இவர் பெங்களூருவைச் சேர்ந்த பிபின் சந்திரன் (38) என்பவரை கடந்த 2024 ஏப்ரல் மாதம் திருமணம் செய்து பெங்களூருவில் கணவருடன் வசித்து வருகிறார். டிவி சீரியல்களில் நடிப்பதற்காக சென்னை வரும்போது தங்குவதற்காக அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார்.
கணவருடன் வாக்குவாதம்
நடிப்பதற்காக சென்னை வரும்போது இந்த வீட்டில் அவர் தங்குவது வழக்கம். அதேபோல சீரியலில் நடிப்பதற்காக கடந்த 3ஆம் தேதி பெங்களூரில் இருந்து அய்யப்பன்தாங்கலுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நள்ளிரவில் கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வீடியோ காலில் விபரீத முடிவு
இதில் ஆத்திரம் அடைந்த சுபாஷினி கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிபின் சந்திரன் இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக காவலாளி இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போரூர் போலீசார், வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சுபாஷினியை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் பகீர்
இதையடுத்து சுபாஷிணி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் சுபாஷினியின் கணவர் பிபின் சந்திரனிடமும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீசாரின் விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நடிகைக்கும் அவருடைய கணவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் பிரச்சனை எழுந்துள்ளது.
கணவரிடம் விசாரணை
இதனால் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கூட இதே போல் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கணவரை சென்னையில் இருந்தபடி மிரட்டி உள்ளார்.
போரூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். டிவி சீரியல் துணை நடிகை ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

