கோவை: கோவை ராமநாதபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உறவினரை கட்டிப்போட்டு தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். பெண் டாக்டருடன் திருமணம் நடக்காமல் போனதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
கோவை நிலாம்பாளையம் அருகே உள்ள மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (57). இவர் ராமநாதபுரம் திருச்சி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார்.
இவருடன் கார்த்திக் என்ற வாலிபரும் வசித்து வந்தார். இருவரும் உறவினர்கள் ஆவர். இந்த நிலையில், கார்த்திக்கின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய வரன் தேடி வந்துள்ளனர்.
இதற்கிடையில், கார்த்திக் தனது உறவினர் பெண்ணான ஒரு டாக்டரை திருமணம் செய்ய விரும்பியுள்ளார்.
ஆனால், அந்த திருமண ஏற்பாடு நின்றுபோனதாக கூறப்படுகிறது.
இதற்கு தனது உறவினரான செல்வராஜ்தான் காரணம் என்று கார்த்திக் நினைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி, இருவரும் செல்வராஜின் வீட்டில் உள்ள அறையில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது, பெண் டாக்டரை திருமணம் செய்ய முடியாமல் போனது குறித்து இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென கார்த்திக், “அந்த பெண் டாக்டரை திருமணம் செய்ய முடியாமல் போனதற்கு நீங்கள்தான் காரணம்” என்று கூறி செல்வராஜை தாக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, செல்வராஜின் கைகள், கால்களை பிளாஸ்டிக் கயிற்றால் கட்டிப்போட்டு, இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
வலி தாங்க முடியாமல் செல்வராஜ் அலறிய சத்தம் கேட்டு, வீட்டு உரிமையாளர் அங்கு விரைந்து வந்துள்ளார். இதையடுத்து, கார்த்திக் செல்வராஜின் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர், அக்கம் பக்கத்தினர் செல்வராஜை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து செல்வராஜ் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

