கோவை: கோவை வழியாகவே சென்னை கோட்டையை பிடிக்க முடியும் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
கோவை வழியாகவே சென்னை கோட்டையை பிடிக்க முடியும் என வானதி சீனிவாசனை ஆதரித்து பியூஸ் கோயல் தேர்தல் பரப்புரை மேற்கொணடார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சாய்பாபா காலனி பகுதியில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பியூஸ் கோயல் மற்றும் வானதி சீனிவாசனுக்கு பிரம்மாண்டமான தாமரை மாலையை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக பேசிய வானதி சீனிவாசன், தங்களது பிரச்சாரத்தில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சரை கோவை மக்களின் சார்பில் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
Read news:செட்டிபாளையத்தில் தலைதூக்கும் ரவுடிசம் – இளைஞர் மீது தாக்குதல் – வீடியோ
தொடர்ந்து ‘வணக்கம்’ எனத் தமிழில் தனது உரையைத் தொடங்கிய பியூஸ் கோயல், கோவை மக்கள் அனைவரும் தனது சகோதரி வானதி சீனிவாசனைப் போலவே கடின உழைப்பாளிகள் மற்றும் எப்போதும் புன்னகைப்பவர்கள் எனப் புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாடு பொருளாதாரத்தில் சிறந்த மாநிலம் என்றாலும், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றும், ஊழல் மட்டுமே மேலோங்கி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். திமுகவில் நிலவும் குடும்ப அரசியல் காரணமாக மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சாடிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அத்தகைய சூழல் இல்லை எனத் தெரிவித்தார்.
திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி மற்றும் சபரீசன் ஆகியோர் மட்டுமே அதிகார மையங்களாக இருப்பதாகவும், அனைத்து வகையான மாஃபியாக்களுக்கும் முதலமைச்சர் குடும்பமே பொறுப்பு என்றும் அவர் கடுமையாகச் சாடினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்டாலின் குடும்பத்தின் ஏஜெண்டாகச் செயல்பட்டதால் தான் ஊழல் வழக்கில் சிறை செல்ல நேரிட்டது எனக் குறிப்பிட்டபோது, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் செந்தில் பாலாஜியை ‘பத்து ரூபாய் பாலாஜி’ என முழக்கமிட்டனர்.
மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கினாலும், மாநில அரசு உரிய ஆவணங்களைத் தராமல் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டு, மத்திய அரசு நிதி தரவில்லை எனப் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக பியூஸ் கோயல் தெரிவித்தார். மேலும், மக்களுக்கு ஓட்டுப் போட்டால் உதயநிதி தான் முதல்வராவார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரித்த அவர், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டைப் பிரதமர் மோடி கொண்டு வந்தும், அதை திமுகவும் காங்கிரஸும் எதிர்ப்பதாகக் கூறினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் நிலைநாட்டவும், ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டவும் அதிமுக-பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். கடந்த முறை கோவையின் அனைத்துத் தொகுதிகளிலும் நமது கூட்டணியே வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், சென்னையில் அதிகாரத்தைப் பிடிக்க கோவை வழிப்பயணமே முக்கியமானது என்றும், மீண்டும் அதேபோன்ற வெற்றியைப் பதிவு செய்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

