கோவை: தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது சிறுவன் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் மானசா மாலிக். இவரது மனைவி மானசிபோலா (20). இவர்களது 2 வயது குழந்தை ஆதித்யா. இவர்கள் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள துணி கடை விடுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை மானசிபோலா குழந்தையை வீட்டின் முதல் தளத்தில் விளையாட விட்டுவிட்டு, தனது மாமியாரிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறி வேலைக்கு சென்றார்.
சிறிது நேரத்தில் மானசிபோலாவிற்கு அவரது மாமியார் போன் செய்து, குழந்தையைக் காணவில்லை எனப் பதற்றத்துடன் கூறியுள்ளார்.
உடனே வீட்டிற்கு ஓடி வந்த மானசிபோலா குழந்தையைத் தேடியுள்ளார். அப்போது, வீட்டின் தரைதளத்தில் இருந்த சுமார் 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் ஆதித்யா விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர், குழந்தை ஆதித்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையைப் பறிகொடுத்த தாயின் கதறல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


