கோவை:கோவை நஞ்சுண்டாபுரத்தில் முதிய பெண்ணை கொலை செய்து நகை, பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான நேபாள தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த டாக்டர் ராம்குமார். இவரது தாயார் கஸ்தூரி (82). இவர், வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவுவதற்காக நேபாளத்தை சேர்ந்த சுர்ஜா (42) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தினர்.
அந்த வீட்டில் ஏராளமான நகை மற்றும் பணம் இருந்தது. அதை பார்த்ததும் சுர்ஜா கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார்.
உடனே அவர் நேபாளத்தில் இருக்கும் தனது கணவர் ராஜூ (45) மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கடந்த மாதம் 6ம் தேதி நேபாளத்தை சேர்ந்த சுர்ஜாவின் கணவர் ராஜூ (45) தனது உறவினர்களான ராகேஷ் சவுத் (26), திலீப் சாகி (24), தாமூர் புக்தா (25) ஆகியோருடன் கோவை வந்து, கஸ்தூரியை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தனிப்படைகள் நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனிப்படை போலீசார் பெங்களூருவில் வைத்து ராஜூவின் உறவினர்களான ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமூர் புக்தா ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள நேபாள நாட்டு தம்பதியான ராஜூ – சுர்ஜா தம்பதியை தேடி வருகிறார்கள். அத்துடன் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே, தம்பதி நேபாள நாட்டுக்கு தப்பிச்சென்று இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
எனவே, இது தொடர்பாக ஒன்றிய அரசு மூலம் நேபாள நாட்டுக்கு கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில் கோவையில் கொலை செய்துவிட்டு ராஜூ – சுர்ஜா தம்பதியினர் நேபாள நாட்டுக்கு வந்து பதுங்கி இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும், அந்த தம்பதியினர் நோபாள நாட்டுக்கு அருகில் உள்ள மாநிலங்களில் பதுங்கி உள்ளனரா? அல்லது வேறு எங்கும் வசித்து வருகிறார்களா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


