கோவை: கோவையில் சமீப காலமாக டிஜிட்டல் அரஸ்ட் என்று கூறி பணத்தை அனுப்ப வைத்து மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்துவிட்டது.
கோவையை சேர்ந்தவர் 73 வயது முதியவர். இவர் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி. இவரது செல்போனுக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நான் மும்பையில் இருந்து சி.பி.ஐ. அதிகாரி பேசுவதாக கூறினார்.
மேலும் அவர், உங்கள் வங்கி கணக்கில் இருந்து போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகமாக பணம் அனுப்பப்பட்டு உள்ளதை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக, நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களை வீட்டில் இருந்த படியே நாங்கள் டிஜிட்டல் அரஸ்ட் செய்து உள்ளோம். உங்கள் வங்கி கணக்கில் உள்ள ரூ.42 லட்சத்தை அபராத தொகையாக செலுத்தினால் மட்டுமே உங்களை விடுவோம் என்று கூறி உள்ளார்.
அதற்கு அந்த முதியவர், நான் யாருக்கும் பணம் அனுப்பவில்லை. பின்னர் ஏன் உங்களுக்கு அபராத தொகை செலுத்த வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீடியோ காலில் வந்த அதே நபர், போலீஸ் சீருடையில் இருப்பது போன்றும், பின் பக்கத்தில் போலீஸ் நிலையம் இருப்பது போன்ற அடையாளங்களும் இருந்தன.
தொடர்ந்து அவர்கள் நாங்கள் உங்கள் வீட்டின் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசாரை கண்காணிப்புக்கு வைத்து உள்ளோம். அபராத தொகையான ரூ.42 லட்சத்தை செலுத்தும் வரை நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
அதையும் மீறி சென்றால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டி உள்ளனர்.
அதை நம்பாத அந்த முதியவர் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டு, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போலீசார் டிஜிட்டல் அரஸ்ட் என்பது கிடையாது.
அப்படி யாரும் கூறி மிரட்டினால் நம்ப வேண்டாம், அத்துடன் பணம் கேட்டு மிரட்டினால் அனுப்ப வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து, அந்த முதியவர் நிம்மதியடைந்தார். இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: டிஜிட்டல் அரஸ்ட் என்பதே கிடையாது. கைது செய்ய வேண்டும் என்றால், போலீசார் வீட்டுக்கே வந்து கைது செய்துதான் அழைத்து செல்வார்கள். டிஜிட்டல் அரஸ்ட் என்று சொல்லி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அதுபோன்று போலீஸ் அதிகாரிகள் என்று கூறி வங்கியில் உள்ள பணத்தை நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு அனுப்புங்கள் என்று கூறி மிரட்டினாலும் பணத்தை அனுப்பக்கூடாது.
எந்த போலீஸ் அதிகாரிகளும் நமது வங்கியில் உள்ள பணத்தை அவர்களுக்கு அனுப்ப சொல்ல மாட்டார்கள். இதில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். அப்படி யாரும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டினால், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கோ, சைபர் கிரைம் போலீசுக்கோ தொடர்பு கொள்ளலாம்.
கோவை மாநகர காவல் துறை சார்பில் டிஜிட்டல் அரஸ்ட் தொடர்பாக குறும்படம் வெளியிட்டும் மக்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


