கோவை: சட்டமன்றத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசு பள்ளியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெல்லும். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளும், அவிநாசி தொகுதியையும் சேர்த்து மொத்தம் 11 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளது. நீலகிரி, திருப்பூர், கோவையில் அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும்.
மக்கள் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்ற ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
கோவையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பணிகள் திருப்திகரமாக இல்லை. கவுண்டம்பாளையத்தில் இன்று காலையிலும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜுனன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பேசி போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.
தேர்தல் ஆணையமும், போலீசாரும் வேகமாக செயல்பட வேண்டும். கோவை அமைதியான மாவட்டம்; ஆனால் இன்று வேறு மாதிரியான சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
இதனை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்; நாங்களும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.


