கோவை: கோவை மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியில், குடியிருப்பு ஒன்றின் ஷூ ரேக்கிற்குள் 7 அடி நீளமான சாரை பாம்பு புகுந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியது.
வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த காலணி அடுக்கிற்குள் (shoe rack) பாம்பு பதுங்கி இருந்ததை கண்ட குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓடியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர், நேற்று காலை தனது வீட்டின் வெளியே இருந்த ஷூ ரேக்கை பார்த்த போது, அதற்குள் ஏதோ கருப்பாக அசைவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது, சுமார் 7 அடி நீளமான சாரை பாம்பு ஒன்று சுருண்டு பதுங்கி இருப்பது தெரியவந்தது.
Read news வண்டி ஓட்டிப் பார்க்கட்டுமா? கோவையில் உதவியரிடம் கைவரிசை; வீடியோ
உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன், மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் சுரேந்தருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுரேந்தர், ஷூ ரேக்கிற்குள் பதுங்கியிருந்த பாம்பை சுமார் 20 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு லாவகமாகப் பிடித்து, பாதுகாப்பாக சாக்குப்பையில் அடைத்தார்.
வீடியோ காட்சிகள்
பின்னர், பிடிக்கப்பட்ட சுமார் 7 அடி நீளமான சாரை பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர்.
கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியைத் தேடி பாம்புகள் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வன உயிரின ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



