கோவை: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்வதாக குறுஞ்செய்தி அனுப்பிய கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண், கோவையில் உள்ள கல்லூரியில் மருந்தியல் (Pharmacy) படிப்பை முடித்துள்ளார். தற்போது அவர் கோவையில் தங்கி, தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், அவருடன் படித்த மாணவர் அவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்தாக கூறப்படுகிறது. தங்கள் மகளின் காதலை அறித்த பெற்றோர், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, பெண்ணின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு காதலை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, தான் காதலிக்கும் நபரையே திருமணம் செய்து கொள்வேன் என கூறியதாக தெரிகிறது.
மன அழுத்ததில் இருந்த அவர், ‘நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’ என தனது பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளனர், ஆனால் செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கோவைக்கு வந்த பெற்றோர், மாணவி தங்கி இருந்த அறையைச் சோதித்தபோது அவர் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.



