கோவை: உள்ளக குழு அமைக்காத அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கூறியதாவது:-
பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்தின்படி, 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கிளை நிறுவனங்களில் தனித்தனியாக உள்ளக குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
இந்த குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டு இருக்க வேண்டும். உள்ளக குழுத் தலைவராக பெண் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.
மேலும், இக்குழுவில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். ஒரு உறுப்பினர் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் குறித்து நன்கு அறிந்தவராகவோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.
இதுவரை உள்ளக குழு அமைக்காத நிறுவனங்கள் உடனடியாக உள்ளக குழுவை அமைத்து, அதன் விவரங்களை மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உள்ளக குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013-ன் கீழ் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
உள்ளக குழு அமைத்த விவரங்களை
SHEBOX PORTAL – https://shebox.wed.gov.in/
TNPOSH – https://www.tnswd-poshice.tn.gov.in/ords/r/wsswdice/swice/home
தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உள்ளக குழு அமைத்துள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஆண்டு அறிக்கையை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



