கோவை: கோவையில் பூட்டிய வீட்டிற்குள் முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் (58), கோவை ராம் நகர் விவேகானந்தர் சாலையில் உள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் வாடகைக்கு தங்கி வந்தார். தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த அவர், திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 12ஆம் தேதி காலை, வீட்டின் உரிமையாளர் கோபிநாத் மூன்றாவது மாடிக்கு சென்றபோது, சீனிவாசன் தங்கியிருந்த வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அவர், சீனிவாசனின் உறவினரான ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கோவைக்கு வந்த நாகராஜன், ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்தபோது சீனிவாசன் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காட்டூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சீனிவாசனின் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



