கோவை: கோவையில் அறைக்குள் புகுந்து கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் ஹரி பிரகாஷ் (18). இவர் கோவை ஈச்சனாரி அருகேயுள்ள முத்து நகரில் அறை எடுத்து தங்கி, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். கடந்த 12-ம் தேதி இரவு, ஹரி பிரகாஷ் தனது அறையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அறைக்குள் திடீரென 2 வாலிபர்கள் புகுந்தனர். அவர்கள் ஹரி பிரகாஷை மிரட்டி பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் பயந்துபோன ஹரி பிரகாஷ், தன்னிடம் இருந்த ரூ.700-ஐ அவர்களிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ஹரி பிரகாஷ் சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவரை மிரட்டி பணம் பறித்தது விருதுநகரைச் சேர்ந்த பிரவீன்குமார் (24) மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த பாரத் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மலுமிச்சம்பட்டி மற்றும் ஈச்சனாரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறை எடுத்துத் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து இதுபோன்ற பணம் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ள நிலையில், மாணவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



