கோவை: கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி வேன் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த 6 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், அவரது தாய் பெங்களூருவில் வேலை செய்து வருவதால், சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளார்.
பள்ளி விடுமுறை காரணமாக சிறுமியின் தாய் கோவை வந்து, தனது மகளை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமி மிகவும் சோர்வாக இருந்ததை கவனித்த தாய், காரணம் குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு சிறுமி உடலில் வலி இருப்பதாக தெரிவித்தார். பின்னர் பரிசோதித்தபோது காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், மேலும் விசாரித்துள்ளார்.
அப்போது பள்ளி முடிந்ததும் வேனில் முதலில் ஏறும் நேரத்தில், வேன் டிரைவர் சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி அழுதபடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமிக்கு பெங்களூருவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பள்ளி வேன் டிரைவர் கணேசன் (43) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



