கோவை: நாய் காணாமல் போன விவகாரத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து தாய், மகன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சின்னமேட்டுப்பாளையம் (Chinnamettupalayam), வேளப்பநாயக்கன்புதூர் (Velappanaickenpudur) பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (39) என்பவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரியா (52) என்பவரிடம் இருந்து ஆண் நாய் ஒன்றை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாய் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராஜ்குமார் பல்வேறு இடங்களில் தேடியதுடன், சமூக வலைதளங்களிலும் தகவல் வெளியிட்டு நாயைத் தேடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பிரியா, ராஜ்குமாரை தொடர்புகொண்டு நாய் குறித்து விசாரித்துள்ளார். அப்போது நாய் காணாமல் போன தகவலை ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நேற்று ராஜ்குமார் வீட்டில் இல்லாத நேரத்தில், பிரியா மற்றும் அவரது மகன் ராகவ் கிருஷ்ணன் ஆகியோர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த மற்றொரு நாய் குட்டியை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து ராஜ்குமார் கேட்டபோது, பிரியா மற்றும் ராகவ் கிருஷ்ணன் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜ்குமார் சரவணம்பட்டி (Saravanampatti) போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் பிரியா மற்றும் ராகவ் கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தாம் தத்து கொடுத்த நாயை ராஜ்குமார் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக பிரியாவும் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் ராஜ்குமார் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



