கோவை: கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சீரநாயக்கன் பாளையம், டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி சரவணதேவி (23). இவர் கோவை பி.என்.புதூர், புளியமரம் பேருந்து நிறுத்தம் அருகே தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.
கடந்த 20ம் தேதி இரவு சரவணதேவி தனது கடையில் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், கடையில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சரவணதேவியிடம், “நீ இந்த இடத்தில் தொடர்ந்து கடை நடத்த வேண்டுமானால், எனக்கு உடனடியாக 1,000 ரூபாய் தர வேண்டும்” என்று கேட்டுள்ளார்.
அதற்கு சரவணதேவி தன்னிடம் பணம் இல்லை என்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணதேவிக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். அவரின் சத்தத்தை கேட்டு, கடையின் அருகே இருந்த பொதுமக்களும், மற்ற வியாபாரிகளும் ஓடி வந்து அந்த நபரை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சரவணதேவி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் பணம் கேட்டு மிரட்டியது சீரநாயக்கன் பாளையம் பாரதியார் வீதியை சேர்ந்த பத்மநாபன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.



