கோவை: 150 ஆண்டுகள் பழமையான துடியலூர் வாரச்சந்தையின் இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
கோவை மாநகர் துடியலூரில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை தோறும் கூடும் இச்சந்தையில் சுற்றுப் பகுதியில் உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அவர்கள் விளைவிக்கும் பொருட்கள் மற்றும் ஆடு மாடு உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்று வருகின்றனர். மேலும் 10 ஆயிரத்திற்கு மேற்பட பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் இச்சந்தையில் ஒரு பகுதியை காலி செய்து அங்கு குப்பைகளை தரம்பிரிக்கும் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி முடிவு செய்து அங்கு பணிகளை தொடங்கினர். இதையறிந்த சுற்றுவட்டார பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து சந்தை பகுதியில் ஒன்று கூடிய விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து வந்தனர். இதையறிந்த துடியலூர் காவல்துறையினர் அங்கு அவர்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்த அறிவுறுத்தினர்.
தொடர்ந்து துடியலூரில் உள்ள மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் தலைமை பொறியாளர் விஜயகுமாரை சந்தித்து முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். ஏற்கனவே இவர்கள் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷை சந்தித்து மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


