கோவை: கோவையில் தனித்தனியாக நடைபெற்ற போலீஸ் சோதனைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோக்கும் அதிகமான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை செல்வபுரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அசோக் நகர் ரவுண்டானா அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பெரோஸ்கான் (31), புலியகுளம் ரெட் ஃபீல்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (30), சூலூரை சேர்ந்த ஆகாஷ் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் குனியமுத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, குளத்துப்பாளையம் சாலையில் உள்ள காலி மைதானத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஸ்ரீதர் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



